16 ஜூலை, 2012

நதியின் பாதம் இடரும் கூழாங்கற்களின் மொழி பேசி வருவாய் நீ

நதியின்  பாதம் இடரும்
கூழாங்கற்களின்  மொழி பேசி
வருவாய் நீ எனக்
காத்துக் கிடக்கிறேன்.

எங்கிருந்தோ
காற்று சுமந்து வரும்
சிற்றிலையாய்
என்னை நீ அடைவாய் என
எதிர் நோக்கிக் இருக்கிறேன்.

எங்கோ எவரோ உதிர்த்த
புன்னகை நீ
என
நான் அறிவேன்.
உன்னைச்  சுமந்து வந்து
என்னிதழில் பொருத்துகின்ற 
காற்று வரும் வழி பார்த்துக்
காத்துக் கிடக்கிறேன்.

ஓசையற்ற இரவுகளில்
சுவரெங்கும் எதிரொலிக்கும்
என் 
உள்மனப் புலம்பல்களில், 
ஓய்வற்றப் பகல்களிலும்
அகல மறுத்துப்
பின் தொடரும்
என் 
அடிமனத்தின் நிழல்களில்

உன்னை
இன்னும்
தேடிக் கொண்டே  இருக்கிறேன்.

இரவுக் கல்லறையிலிருந்து
நான்  உயிர்த்தெழும் 
காலைகளில்
வெளிச்ச விழிகளுக்கஞ்சி
நான் சரண் புகும்
இருள் இரவுகளில் 

என் இருப்பின் காரணத்தை
எனக்குணர்த்த 
வருவாய் எனக்
காத்துக் கிடக்கிறேன்.

பொருள் இல்லாதப்
பைத்தியத்தின் கூக்குரலாய்
ஒலிக்கும் என் கவிதைகளின்
அர்த்தங்களை மொழி பெயர்க்க 

நதியின்  பாதம் இடரும்
கூழாங்கற்களின்  மொழி பேசி
வருவாய் நீ என

ஏங்கித் ததும்பும்
என் தாய்மையோடு
இன்னும் 
காத்துத்தான்  கிடக்கிறேன்.












.