எங்கேயோ விழுந்து
வெடிக்கிறது
இடி.
உறுப்புகள் தெறித்து
திசையெங்கும் பறக்க
எழும்
கடைசிக் கேவலாய்
வீறிட்டழுகிறது
காற்று.
மின்சாரம் செத்து விழ
பிணமாய் அழுத்துகிறது
இருட்டு.
தொண்டையில் சிக்கிய
உணவுக் கவளம்
தெறித்துச் சிதற
அலருகின்றன
குழந்தைகள்.
கூரையின் பிளவு வழி
விழுகின்றது
மின்னல்.
உயிரோலம் எழுப்பும்
பிள்ளைகளை
அடிவயிற்றில் பொதித்த படி
மேல் கவிழ்கிறார்
அம்மா.
விமான இறக்கைகளாய்
காற்றைக் கிழித்தவாறு
வெளிச்சக் குண்டுகளைப்
பொழிந்து கொண்டு
உணர்ச்சியற்றுப் பெய்கிறது
அந்நிய தேசத்து
ஆலங்கட்டி மழை.