இயற்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இயற்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

22 மார்., 2015

ஊனம்

ஊனமாக்கப் படுதலை
ஏற்றுக் கொள்கிறது மரம் .

ஊனத்தின் வலியை
விழுங்கி விட்டுப்
புதுக் கிளையும் வளர்க்கிறது .

        மரத்திற்கு உன்னை விட
        ஐந்தறிவு குறைவு-
       உறுப்பிழந்தால் புதிது வளர்.

       மரத்தை விட உனக்கு
       ஐந்தறிவு அதிகம் -
       வெட்டும் கரங்களை வெட்டு.

23 டிச., 2014

அமுதினி

எல்லையின்றி நீளும்
நேர்கோட்டில் தேங்கும்
ஒற்றைப் புள்ளியாய்
உறைகின்றது இக்கணம்.

பொன் துகள்களாய் உதிரும் உன்
புன்னகை,
மென்பனியாய்ப் படிந்து படரும் உன்
சுவாசம்.

ஆழ்கடலின் உள்ளிருந்து எழுகின்ற குமிழ்களாய்
முகிழ்த்து மறையும் உன் குரலின்
அதிர்வுகள்.

உறைந்திருக்கும் புல்நுனியில்
மிளிர்கின்ற பனித்துளியாய்

அசைவற்ற நதிப்பரப்பில்
ஒளிர்கின்ற சிற்றலையாய்

ஒலியற்றப் பாலைவெளியில்
ஒலிக்கின்ற ஒற்றை மணலாய்

உயிர்த்து உறங்குகிறாய்
உறைந்த இக்கணத்தில்.

15 ஜன., 2014

அலையும் இலையும்

கடலின் மேல் மிதக்கும்
இலை போல்
நம் வாழ்க்கை.

வீழும் மழைத்துளி
முத்தென உள்ளுறையா
வெற்று இலைதான்
நாம்.

தன்னியக்கம்
தொலைத்து
அலைகளில் கிழிபடும்
மென் னிலைதான்
நாம்.

நம் உயிர்ப்பின்
அசைவுகள்
நம்முடையதல்ல-

ஓயாது சுவாசிக்கும்
கடலின் மார்பின்
விம்மித் தணிதல்கள்.

நம் உயிரினைக் குழைத்து
வார்த்த வனைவுகள்
நிலைப்பவையல்ல-

கடலலையின் வன்கரம்
வரைந்து அழிக்கும்
கரைமணல் ஓவியங்கள்.

எல்லைகளின்றி
ஆழ்ந்து
அகன்று
உயிர்த்துக் கிடக்கின்றது
கடல்.

அதில்
அறிவும் அற்று
உணர்வும் அற்று
செத்து மிதக்கிறோம்
நாம்.

 
      
       
      

25 நவ., 2012

எனக்காகப் பெய்யாத மழை

உறங்கும் ஒலித் துகள்கள் 
எழுந்து சிதறும் படி 
வெளியில்
பெய்து கொண்டிருக்கிறது
மழை.

ஈரத் தறியில் நெய்த
ஆடை உடுத்திய படி
உறைந்து போன காற்று.

வானச் சில்லுகளை
ஏந்திப் பிடித்தபடி
படுத்துக் கிடக்கும் 
பூமி.

வெளிச்சத்  துளிகளை
உமிழ்ந்த அயர்ச்சியில்
இருண்டு
நலிந்த  
வானம்.

நீரிலைகள்  உதிர்த்து 
இலைத் துளிகளைச்
சுமக்கும்  
மரங்கள்.

உடுத்திய சிற்றோடைகள் 
ஒழுக நடக்கும் 
வேளாண் மகளிர்.

வண்ணங்கள் சிதறப்
பறக்கும்
பட்டாம்பூச்சிகள்.

உள்ளங்கால் தெறிக்க
விரையும்
சிறுவர்கள்.

என

இறுக மூடிய
கண்ணாடிக் குமிழினின்று
வெளி நீள முயலும்
என்
விரல்களுக்கு அகப் படாமல்
எப்போதும் போல
பெய்து முடிகின்றது 
எனக்காகப் பெய்யாத மழை.

5 ஆக., 2012

ஊனம்

ஊனப் படுதலை
ஏற்றுக் கொள்கிறது
மரம்.

ஊனத்தின் வலியை
விழுங்கி விட்டுப்  
புதுக் கிளையும்
வளர்க்கும் அது.

                               மரத்திற்கு உன்னை விட
                               ஐந்தறிவு குறைவு-
                               உறுப்பிழந்தால் புதிது வளர்.

                               உனக்கு மரத்தை விட
                               ஐந்தறிவு அதிகம்-
                               வெட்டும் கரங்களை வெட்டு.  
 

4 ஆக., 2012

மழைக்கால இரவுகள்

உடல் சுற்றிய போர்வையாய் 
குளிரீரம் படர,

ஈரம் உள்நுழைந்து
மாயக் கட்டுகளை 
அவிழ்த்து விட,

முளை ஒன்று 
வெளி ஓட்டை உள்ளிருந்து
செல்லமாய் முட்டுகிற    
குறுகுறுப்பை ரசித்திருக்கும்
ஈர மண் புதைத்த விதையாக  

உணர்கிறேன் என்னை 

மழைக்கால இரவுகளில்.


   

3 ஆக., 2012

வேர்கள்

மரங்கள் தங்கள்
இலைகளையும்
செடிகள் தங்கள்
மலர்களையும்
உதிர்த்துப் பழகியவை.

எனினும்

மரங்களும்
அச்செடிகளும்
என்றும் தங்கள்
வேர்களை உதிர்த்துப் பழகியதில்லை.