அம்மா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அம்மா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

10 ஆக., 2013

கனலினி

உன்னுடல் ஓடையை
என்விரல்கள் அளையும் போது
நீயெப்படி உணர்கிறாயோ
நானுமதை  உணர்கின்றேன்.

என் முகம் காணாது
அழுதோயும் உன்னைப் போல்
நீயில்லாப் பொழுதுகளில்
நானேங்கி  ஓய்கின்றேன்.

உறக்கத்தில் நீ விழிக்க 
அலையும் உன் கண்கள் போல்
உறக்கத்திலும் உனைத்தேடி
அலையும் என்  கைகள்.
மதிப்பில்லாப் பொருள்களையும் 
பொக்கிசமாய் நீ  காப்பாய்.
பொருளின்றி நீ பேசும்
சொற்களையும்  காப்பேன்  நான்.

என்னுடையத் தாலாட்டில்
நீயுறங்கிப் போகும் முன்
உன்னுடையத் தாலாட்டில்
நான் உறங்கிப் போவேன்.

இப்படி
என்னை நீயாக்கும்
அந்த 
உன்னத மந்திரத்தை
எந்த விரலிடுக்கில்
ஒளித்து வைத்துள்ளாய் நீ ?


15 டிச., 2012

வலியின் குருதி வழியும் உடல்கள்

உன் குருதி உண்டு 
தொடங்கிய வாழ்வு
நம் குருதி சொட்ட
அறுபட்டுப் போனது.

உன்னிலிருந்து
விடுபட்ட பின்பு 
உன் வலிகளின் பகிர்வும்   
நின்றே போனது.


நிறமின்றி வழிந்த
உன் விழி நீரில்
என்னுள் பாயும்
சிவப்பின் சாயல்.

முட்டி அழுது
தரையில் உகுத்த
உன் சிவப்பை நீர்க்கும்
என் நிறமில்லாக் குருதி.

என்னிலிருந்து
விடுபட்டு நின்று
உன்
வலிகளின் மூலத்தைத்
தேடுகின்றேன். 

உன்னில் கண்ட
நீர்மங்களின் சுரப்பு
வழியும் உடல்களில்
உன்னைக்
காணுகின்றேன்.

ஆணெனும் முத்திரை
அழித்து விட்டு
உன் யோனியின்
முத்திரை சுமக்கும்
என்னுடல்.