22 ஆக., 2012

கற்கள்

அவன்  
தரையில் வேரூன்றி
நின்று கொண்டிருந்தான்.

ஓடும் மனிதர்கள் பலர்
ஓரக்கண்ணில் பார்த்து
இகழ்ச்சிப் புன்னகை பூத்து
மீண்டும் விரைந்தனர்.

பின்னர் 
அவனை நோக்கிக்
கற்கள் எறியப் பட்டன.

அப்போதும்
அவன்
அங்கேயேதான்
அசையாமல் நின்று கொண்டிருந்தான்.
கல்வீச்சும் தொடர்ந்தது.

சிறிது காலத்துக்குப் பின்
அவன் நின்றிருந்த இடம்
சிறு குன்றாகி இருந்தது.
அது
அவனை நோக்கி வீசப் பட்ட
கற்களால் ஆகியிருந்தது.
வீசிய கற்கள்
தொட முயன்றுத்
தோற்றுத் தோற்று
அவன் அடியில் தேங்கின.

இப்போது
அவன் நின்றிருக்கும் இடம்
பெரும் மலையாகி இருக்கிறது.

கற்கள் வீசுபவர்கள்
அவன் உயரம் பார்த்து
மலைத்துப் போகிறார்கள்.

அவர்கள் வீசும்
ஒவ்வொரு கல்லுக்கும்
அவனது உயரம்
கூடிக்கொண்டேதான் இருக்கிறது.

19 ஆக., 2012

விரல்களின் வனம்

யாசகம் கேட்டுக்
கைகளை ஏந்துகிறேன்.

ஏந்திய
உள்ளங்கையில்
விழுகின்றன
விரல்கள்.

ரத்தம் வற்றி  உறைந்து
விறைத்த விரல்கள்.

ரத்தச் செம்மை காணாது
வெளிறிய விரல்கள்.

ரத்தக்  கசிவில் ரேகைகள்
அழிந்த விரல்கள்.

ரத்தச் செழிப்பில் மின்னும்
மோதிர விரல்கள்

என
விழுந்து கொண்டிருக்கின்றன
இன்னும் இன்னும் விரல்கள்.

வீழும் விரல்களைத்
தின்று
என் விரல்கள் செழிக்க

ஏந்திய
உள்ளங்கையில்
வளர்கின்றது
ஒரு விரல்களின் வனம்.







ஏழ்மையின் மொழி

ஏழ்மையின் மொழி
எளிமையானது.

அது 
ஆடைகள் அற்றது.
அணிகள் அற்றது.
ஒலிகள் அற்றது-
கற்றுக் கொள்ளச்
சிக்கல்கள் அற்றது.

ஏழ்மையின் மொழி
காலங்கள் கடந்து
நிலங்கள் கடந்து
எளிதில் புரிவது.
இலக்கணத் 
திரிபுகள் அற்றது.

மிதித்துச் சென்றாலும்
பாதங்களை நெருடாத
நடை பாதைக் குழந்தையின் புன்னகைகள் போல-

ஏழ்மையின் மொழி
மிகவும் எளிமையானது.

11 ஆக., 2012

இவ்வாழ்க்கை

காற்று சுமக்கும் 
சிற்றிலை போலவோ

நதியில் இழுபடும்
மரக்கிளை போலவோ  

ஆனதிந்த வாழ்க்கை.

ஆதியிலிருந்து அறுபட்ட
பட்டமாய்

வேரினிலிருந்து விடுபட்ட
கொடியாய் 

மூலம் தொலைத்து
நலியும் இவ்வாழ்க்கை.

காற்றின் தொடுதலும் 
நதியின் அணைப்பும்

இன்பமென நம்பித்
தொலையும்
இவ்வாழ்க்கை.

அறுபடலும்
விடுபடலும்    
விடுதலை என்று

எண்ணி மயங்கி
ஏமாறும்
இவ்வாழ்க்கை.  
 

  


 

5 ஆக., 2012

ஊனம்

ஊனப் படுதலை
ஏற்றுக் கொள்கிறது
மரம்.

ஊனத்தின் வலியை
விழுங்கி விட்டுப்  
புதுக் கிளையும்
வளர்க்கும் அது.

                               மரத்திற்கு உன்னை விட
                               ஐந்தறிவு குறைவு-
                               உறுப்பிழந்தால் புதிது வளர்.

                               உனக்கு மரத்தை விட
                               ஐந்தறிவு அதிகம்-
                               வெட்டும் கரங்களை வெட்டு.  
 

4 ஆக., 2012

காலம்

விரையும் புகைவண்டிக்குக்
கையசைக்கும்
குழந்தை போலத்தான்
நாமும்
ஓடும் காலத்தின் முன்னே.

நமதுக் கையசைவை
அலட்சிய உடலசைவால்
புறக்கணித்தபடி
விரைந்து ஓடும் அது,
கரும்புகை கக்கி
கருவிழி மறைத்து.   

கட்டற்று நீண்டு
தடையற்றுப் பாயும் அதன்
பரிமாணத்தின் முன்னே
ஒற்றைப் புள்ளியாய்
ஒடுங்கி மறைவோம்
நாம்.

மழைக்கால இரவுகள்

உடல் சுற்றிய போர்வையாய் 
குளிரீரம் படர,

ஈரம் உள்நுழைந்து
மாயக் கட்டுகளை 
அவிழ்த்து விட,

முளை ஒன்று 
வெளி ஓட்டை உள்ளிருந்து
செல்லமாய் முட்டுகிற    
குறுகுறுப்பை ரசித்திருக்கும்
ஈர மண் புதைத்த விதையாக  

உணர்கிறேன் என்னை 

மழைக்கால இரவுகளில்.


   

3 ஆக., 2012

தவம்

சொந்தமாய் சிலுவை சும.
தூண்டுதலின்றி முட்கிரீடம் தரி.
உன்னை நீயே
சிலுவையில் அறைந்து கொள்.

தினம் தினம் உயிர்த்தெழு. 




  

வேர்கள்

மரங்கள் தங்கள்
இலைகளையும்
செடிகள் தங்கள்
மலர்களையும்
உதிர்த்துப் பழகியவை.

எனினும்

மரங்களும்
அச்செடிகளும்
என்றும் தங்கள்
வேர்களை உதிர்த்துப் பழகியதில்லை.

கற்சிலைகள்

தீபத்தின் வெளிச்ச இருட்டில்

தன்னைத்தானே
கண்டுணர  இயலாத
இக் கற்சிலைகள்

வழிபட்டுச் செல்கின்ற
மனித முகங்களில் 
தன் முகம்
தேடுகின்றன.

2 ஆக., 2012

முலைகள்

பல்லாண்டுகால
அடிமைச் சிறையில் இருந்து
விடுபட்ட மகிழ்ச்சியில்
துள்ளுகின்றன
வெள்ளைச்சேலைக் கிழவியின்
முலைகள்.