15 ஜன., 2014

அலையும் இலையும்

கடலின் மேல் மிதக்கும்
இலை போல்
நம் வாழ்க்கை.

வீழும் மழைத்துளி
முத்தென உள்ளுறையா
வெற்று இலைதான்
நாம்.

தன்னியக்கம்
தொலைத்து
அலைகளில் கிழிபடும்
மென் னிலைதான்
நாம்.

நம் உயிர்ப்பின்
அசைவுகள்
நம்முடையதல்ல-

ஓயாது சுவாசிக்கும்
கடலின் மார்பின்
விம்மித் தணிதல்கள்.

நம் உயிரினைக் குழைத்து
வார்த்த வனைவுகள்
நிலைப்பவையல்ல-

கடலலையின் வன்கரம்
வரைந்து அழிக்கும்
கரைமணல் ஓவியங்கள்.

எல்லைகளின்றி
ஆழ்ந்து
அகன்று
உயிர்த்துக் கிடக்கின்றது
கடல்.

அதில்
அறிவும் அற்று
உணர்வும் அற்று
செத்து மிதக்கிறோம்
நாம்.