எல்லையின்றி நீளும்
நேர்கோட்டில் தேங்கும்
ஒற்றைப் புள்ளியாய்
உறைகின்றது இக்கணம்.
பொன் துகள்களாய் உதிரும் உன்
புன்னகை,
மென்பனியாய்ப் படிந்து படரும் உன்
சுவாசம்.
ஆழ்கடலின் உள்ளிருந்து எழுகின்ற குமிழ்களாய்
முகிழ்த்து மறையும் உன் குரலின்
அதிர்வுகள்.
உறைந்திருக்கும் புல்நுனியில்
மிளிர்கின்ற பனித்துளியாய்
அசைவற்ற நதிப்பரப்பில்
ஒளிர்கின்ற சிற்றலையாய்
ஒலியற்றப் பாலைவெளியில்
ஒலிக்கின்ற ஒற்றை மணலாய்
உயிர்த்து உறங்குகிறாய்
உறைந்த இக்கணத்தில்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக