25 நவ., 2012

எனக்காகப் பெய்யாத மழை

உறங்கும் ஒலித் துகள்கள் 
எழுந்து சிதறும் படி 
வெளியில்
பெய்து கொண்டிருக்கிறது
மழை.

ஈரத் தறியில் நெய்த
ஆடை உடுத்திய படி
உறைந்து போன காற்று.

வானச் சில்லுகளை
ஏந்திப் பிடித்தபடி
படுத்துக் கிடக்கும் 
பூமி.

வெளிச்சத்  துளிகளை
உமிழ்ந்த அயர்ச்சியில்
இருண்டு
நலிந்த  
வானம்.

நீரிலைகள்  உதிர்த்து 
இலைத் துளிகளைச்
சுமக்கும்  
மரங்கள்.

உடுத்திய சிற்றோடைகள் 
ஒழுக நடக்கும் 
வேளாண் மகளிர்.

வண்ணங்கள் சிதறப்
பறக்கும்
பட்டாம்பூச்சிகள்.

உள்ளங்கால் தெறிக்க
விரையும்
சிறுவர்கள்.

என

இறுக மூடிய
கண்ணாடிக் குமிழினின்று
வெளி நீள முயலும்
என்
விரல்களுக்கு அகப் படாமல்
எப்போதும் போல
பெய்து முடிகின்றது 
எனக்காகப் பெய்யாத மழை.

1 கருத்து:

  1. Samara,

    The rain is coming down for you. Instead of trying to catch it through the closed door, go out and get drenched.

    As always, the language and imagination are impressive!!

    பதிலளிநீக்கு