10 ஆக., 2013

கனலினி

உன்னுடல் ஓடையை
என்விரல்கள் அளையும் போது
நீயெப்படி உணர்கிறாயோ
நானுமதை  உணர்கின்றேன்.

என் முகம் காணாது
அழுதோயும் உன்னைப் போல்
நீயில்லாப் பொழுதுகளில்
நானேங்கி  ஓய்கின்றேன்.

உறக்கத்தில் நீ விழிக்க 
அலையும் உன் கண்கள் போல்
உறக்கத்திலும் உனைத்தேடி
அலையும் என்  கைகள்.
மதிப்பில்லாப் பொருள்களையும் 
பொக்கிசமாய் நீ  காப்பாய்.
பொருளின்றி நீ பேசும்
சொற்களையும்  காப்பேன்  நான்.

என்னுடையத் தாலாட்டில்
நீயுறங்கிப் போகும் முன்
உன்னுடையத் தாலாட்டில்
நான் உறங்கிப் போவேன்.

இப்படி
என்னை நீயாக்கும்
அந்த 
உன்னத மந்திரத்தை
எந்த விரலிடுக்கில்
ஒளித்து வைத்துள்ளாய் நீ ?