காட்டாற்றில் இழுபடும்
ஓடம் போல
மிதப்பின் இன்பத்தில்
இம்மனம் மயங்கும்.
கையறு நிலையில்
பின்னோக்கித் தொலையும்
வெளியினைக் கண்டு
தினமும் உழலும்.
விழிப்பறிவுறுத்த அறையும் நொடிகள்
கடிகார முள்ளாய்க் காலொடிந்து வீழும்.
காற்றினில் புரளும் உதிரிலை போலக்
கிளர்வுற்று அடங்குதல்
உயிர்ப்பென எண்ணி
அம்மணம் கொண்டு அலைவுறும்
இம்மனம்.
ஏகுதல் இன்றி ஊன்றுதல் இன்றி
அந்தரத்தில் மிதக்கும்
குப்பையைப் போலத்
திரிந்து திரிந்து ஓயும்
இம்மனம்.
வாழ்தலும் இன்றிச் சாதலும் இன்றி
சிறுகச் சிறுகத்
தன்னுள் தானே
அழிவுறும் காலம்
இதுதான்
அரையாயுட் காலம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக